Monday, November 14, 2011

நோய்மையும் ஈரநினைவுகளும்


சாளரம் வழியே நுழைகின்ற நட்சத்திரங்களை
வெறித்துக் கொண்டிருந்தாள் அம்மா
அப்பா எதுவுமே பேசவில்லை
கதவினை தாழிட்டு பூட்டினான் தம்பி
அவனது கரங்கள் பிடிமானமற்று நடுங்கின
அம்மா என்னை அழைத்ததுப் போலொரு பிரம்மை
வெம்மை படர்ந்த தன் கரங்களால்
சுருக்கங்கள் நிறைந்த அப்பாவின் நெற்றியை
அம்மா வருடியபோதுக் கூட
கண்ணிமைத்தாரேயன்றி வேறெதுவுமே பேசவில்லை
எப்பொழுதுமே அப்பா அளவோடு பேசுபவராகவே
இருந்திருக்கிறார் என்பது என் ஞாபகத்திற்கு வந்தது
ஆனால் அம்மா அதிகமாக பேசுவாள்
அதிகமான கோபத்தோடு பேசுவாள்
அதிகமான கருணையோடும் பேசுவாள்
கோபமும் கருணையும் வற்றிப்போன நிலையில்
அம்மாவின் சொற்கள் சாரமிழந்து வடிந்துவிட்டிருந்தன
எங்கும் படிந்திருக்கிறது அடர்மௌனம்
உத்திரத்தில் ஊர்ந்துகொண்டிருந்த பல்லி திடீரென கீழேவிழுகிறது
அப்பா அம்மா தம்பி நான்
எல்லோரும் ஒரு கணம்
ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறோம்
இரவின் நிறங்கள் மெல்ல அழிய
திரும்பவும் வந்துவிடும் வெயில்

Wednesday, September 7, 2011

உயிர்ச்சொல்




நீள்க்குருதி பெருகும்
ஆதிகால வேட்டைநிலத்தில்
ஒரு இனம் இருந்தது,
ஒரு மொழி இருந்தது.
ஒரு சொல் இருந்தது.

இந்த இரவின் மீது
படிந்திருக்கும்
பொய்களின் நிலவை
பற்றி எரியச் செய்யும்
அந்தச் சொல்லை தேடி
அலைகிறேன், நான்.

வெயிற் காலத்திற்கு
தற்கொலையின் மொழி
குளிர் இரவுகளுக்கு
ஸ்பரிசத்தின் மொழி
மழைப் பயணங்களுக்கு
கண்ணீரின் மொழி
இலையுதிர் நினைவுகளுக்கு
கனவுகளின் மொழியென
ஒவ்வொரு பருவத்தின்போதும்
நான் ஒவ்வொரு
மொழியின் ஆடையை
தேர்வு செய்கிறேன்.

ஆனால் பருவங்கள்
குழம்பிய அகாலத்தில்,
பாதைகள் தொலைந்த
வனவிருட்சங்களின் வெளியில்
தனித்து விடப்பட்டிருக்கும்போது
எனக்கு அதிக அவகாசம் கிடையாது.

அடங்காது தகிக்கும்
காற்றின் வெப்பத்திலிருந்து
சீக்கிரம்  மீள
எனக்கு ஒரு சொல் வேண்டும்.
.******
ஆயிரம் ஆயிரம்
இரவுகளுக்கு பிறகு
பூக்கிறது
ஈடன் தோட்டத்தின்
கடைசி மலர்.
நார்சிசஸ்
முதல்முறையாக
தன் பிம்பத்தை பார்க்கிறான்.

மழை பெய்கிறது.
மழையின் துளிகளில்
நார்சிசஸ்
தன்னுடைய பிம்பங்களை
பார்க்கிறான்.

நிலபரப்பை தன்
எண்ணிலடங்கா கரங்களால்
அள்ளிக்கொள்கிறது மழை.

இலைகள் உதிர்கின்றன
பூக்கள் உதிர்கின்றன
வண்ணங்கள் உதிர்கின்றன.

யாவும்
தன் பிம்பங்களால்
தன் அழகால்
நிரம்புவதை
நார்சிசஸ் உணர்கிறான்.
நார்சிசஸிற்கு தன் பிம்பத்துடன்
பேச வேண்டும்.
********
நான் நார்சிசஸ்.
எனக்கு ஒரு சொல் வேண்டும்.
பின் என் பிம்பங்கள் நிறைய
இந்த உலகம் வேண்டும்.
                                    
நன்றி : உயிரோசை
          

Tuesday, June 7, 2011

மனதின் பாழ்வெளியில் கட்டவிழும் வன்மம்


(மனோஜ் எழுதிய ஆயுதம் சிறுகதையை முன்வைத்து.)

ஒருமுறை எல்லா நாளிதழ்களிலும்,தமிழர்கள் சிலர் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்படும் காட்சியுள்ள வீடியோ குறித்த செய்தியும் அது சம்பந்தமான படங்களும் வெளியாகியிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இப்பொழுது அந்த வீடியோ ஐ.நா. நிபுணர் குழுவினால் உண்மையென அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.இதனையும் நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.மனோஜ் அவர்களின் ‘ஆயுதம்’ சிறுகதையைப் படித்தபொழுது என்னுடைய மனதில் முதலில் தோன்றியது அந்த வீடியோக் காட்சி மட்டுமே.சதையும் நரம்புமாக உயிர்த்திருக்கும் ஒரு உடலை வதைத்துக் கொல்வதெனில் அதை செய்யத் துணிபவரின் மனம் எந்த அளவிற்கு வன்மத்தால் நிறைந்திருக்க வேண்டும். மனிதர்களின் மனதில் தகிக்கும் இவ்வகை வன்மத்தினை ஆதாரமாகக் கொண்டே மனோஜ் தனது ‘ஆயுதம்’ சிறுகதையை உருவாக்குகிறார்.

‘ஆயுதம்’ சிறுகதை தனக்குள்ளாக நான்கு உபகதைகளை கொண்டிருக்கிறது. ஒரு வனப் பிராந்தியத்தினுள் ஸ்கார்பிய ராணுவ வீரர்கள் போர்க் கைதிகளான போஸ்னிய முஸ்லிம்களை டிரக்கில் அழைத்து வருகிறார்கள்.அழைத்து வரப்பட்ட போர்க் கைதிகள் புதர்ப்பகுதியில் மண்டியிட்டு அமர வைக்கப்படுகிறார்கள்.இது முதல் கதையின் களம்.இரண்டாவது கதை ஒரு பத்திரிகை ஆசிரியரைப் பற்றியது. மாநகராட்சி பள்ளியொன்றில் வெள்ள நிவாரண உதவித் தொகை பெற திரளும் ஜன நெரிசலில் சிக்கி மிதிபட்டு நாற்பதற்கும் மேற்பட்டோர் இறக்கிறார்கள். இதனை கவர் ஸ்டோரியாக்க முனைந்து தனது நிருபர்களையும் புகைப்படக்காரர்களையும் வேலை வாங்குகிறார் அப்பத்திரிகை ஆசிரியர்.மூன்றாவது கதை தலிபான்களின் முகாமில் நிகழ்கிறது.அங்கே சமீர் எனும் ஒன்பது வயது சிறுவனொருவன் தற்கொலை படைக்காகத் தயார் செய்யப்படுகிறான்.வாளின் கூர்மையால் விரோதியின் தொண்டையைக் கிழிக்கவும் அவனுக்கு கற்றுத் தரப்படுகிறது.கடைசிக் கதையில் நடுத்தர வயதுடைய சுருளிக்கும் அவனுடைய தந்தைக்கும் சொத்து தகராறு ஏற்பட, சுருளியைப் பலர் முன்னனியில் அவமானப்படுத்தி விடுகிறார்,அவனது தந்தை. இதனால் கோபம் அடையும் சுருளி தனது தந்தையைக் காரேற்றிக் கொல்வதென முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களுடன் காத்திருக்கிறான்.அவனுடைய கூட்டாளி மாயாண்டியும் உடனிருக்கிறான்.    

நாம் அனுதினமும் பத்திரிகையில் படிக்கின்ற செய்திகள்தான் ‘ஆயுதம்’ சிறுகதை. நாம் காண மறுக்கும் ஒரு குரூர உலகமும் அதன் மனிதர்கள் நிகழ்த்தும் கொலைகளும் தான் கரு.உண்மையில் அந்தக் குரூர உலகம் நாம் வாழும் இதே பூமிதான்.அவ்வுலகின் மனிதர்கள் என்பதும் நாம்தானேயன்றி வேறுயாருமில்லை.இயற்கையிலேயே மனித மனதின் ஆழத்தில் வன்மம் சின்னதொரு மீனைப் போல் நீந்திக் கொண்டேயிருக்கிறது. நம்முடைய தினசரி செயல்பாடுகளை ஒரு வேற்றாளைப் போல் கவனித்தாலே போதும். இதனைக் கண்டுணரலாம்.

‘ஆயுதம்’ கதையின் முதல் பகுதியில் வரும் போஸ்னிய கைதிகள் நமக்கு ஈழத்தின் வலியையே கவனப்படுத்துகிறார்கள்.இனத்தின் பெயரால் இவ்வுலகில் அரங்கேற்றப்பட்டிருக்கும் ஒவ்வொரு பேரழிவின் சரித்திரமும் நம் உடலை நடுங்கச் செய்பவை.ஸ்கார்பிய கமாண்டர் போர்க்கைதிகளில் ஒருவனான பத்தொன்பது வயது மதிக்கத்தக்க இளைஞனைப் பார்த்து இப்படி கேட்கிறான் "ஹேவ் யு எவர் ஃபக்ட்".அந்த இளைஞன் கவிழ்ந்த தலையுடன் பதிலேதும் பேசாது இருக்கிறான்.அந்த இளைஞனின் உணர்வுகளை விளக்க கதையாசிரியர் அதிக சிரத்தையேதும் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரேயொரு வரிதான்

"குனிந்த தலையில் அந்த இளைஞன் பதில் ஏதும் சொல்லாது இருந்தான்."

ஆனால் அவ்வரி வாசகனுள்ளே பெரும்துயரின் கண்ணீரைப் பீறிடச் செய்துவிடுகிறது.இந்தக் கதையின் மிகப் பெரிய பலம் கதை சொல்லியின் மொழியும் வடிவ நேர்த்தியுமே என்பது என் கருத்து.

நல்ல சிறுகதைகள் குறித்து எஸ்.ரா. சமீபத்தில் பின்வருமாறு கூறினார்.

"நல்ல சிறுகதைகளுக்குள் கிளையில் அமர்ந்திருந்த பறவை சட்டென பறந்து எழுவது போன்ற பறத்தலைக் காணமுடியும், அதுவரை வாசகன் தொடர்ந்து வந்த இயல்பு மாறி கதை தன் சிறகுகளை விரித்து மேலே செல்லும் உன்னதத்  தருணமது, அந்தத் தருணமே கதையின் முக்கியப் படிமமாக ஆகிவிடுகிறது,"

‘ஆயுதம்’ சிறந்த சிறுகதையென்பதில் சந்தேகம் இல்லை.தன்னுடைய தலிபான் வாழ்க்கையை,குழந்தை மனதின் புரிதல்களுடன் சமீர் எடுத்துரைக்கும் இடமே இந்தக் கதையின் உன்னத தருணம்.இருள் வானில் நகர்கின்ற வெள்ளை ஒளியைப் போல் பிரகாசித்து இக்கதை தனது சிறகினை விரிப்பதும் இந்த தருணத்தில்தான்.சமீரின் வழியாக க்தை சொல்லும் ஆசிரியர் பின்வரும் இரண்டு குறிப்புகளில் எழுத்தின் உச்ச சாத்தியக்கூறுகளை அடைகிறார். 

1..பாலைவனத்தின் நடுவே நீல நதியொன்று ஓடுவது போலவும் மரக்கூட்டம் நின்றிருப்பதைப் போலவும் சமீர் கனவு காண்கிறான். அந்த மரக் கூட்டத்தின் மேலே சாக்லெட்டுகள் காய்த்திருக்கின்றன.நதி நீரைப் பருகினால்,அது சாக்லெட் போல் இனிக்கிறது. பாலை மணலைத் தின்றால் அதுவும் இனிக்கிறது.உறக்கத்திலிருக்கும் சமீரை எழுப்பும் ரஹீம் அவனுக்கு ஒரு செய்தி கொண்டுவந்திருக்கிறார்.துரோகி சிக்கியிருக்கிறான். அவனை மறுநாள் வாளால் வெட்ட வேண்டும். இதுதான் அவர் அவனிடம் தெரிவிக்கும் விடயம்.கனவிலிருந்து விழித்த சமீர் சரியென தலையாட்டிவிட்டு மீண்டும் அதே கனவு வராதா என ஏங்குகிறான்.

2..இன்னமும் பத்து வயது நிரம்பாததால் சமீருக்கு இடுப்பில் பெல்ட்டைக் கட்டிக் கொண்டு சிவப்பு பொத்தானை இயக்குவதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. குலாம் நபி(வயது-11) எனும் அவனது சகாவொருவன் அந்த வாய்ப்பை பெறுகிறான்.அதனை ஏமாற்றத்துடன் கூறும் சமீர் அந்த சிவப்பு பொத்தானை அழுத்தினால் மலை உச்சியைத் தாண்டி வானத்தை தாண்டி சொர்க்கத்திற்கு செல்லலாம் என்கிறான் ஆசையாக. 

இதனை படிக்கும்போது எனக்கு மனுஷ்யபுத்திரனின் பின்வரும் கவிதை ஞாபகத்திற்கு வந்தது.

"சிவப்புப் பாவாடை
வேண்டுமெனச் சொல்ல
அவசரத்திற்கு அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொடையறுத்து
பாவனை ரத்தம் 
பெருக்குகிறாள் ஊமைச் சிறுமி."

 மனுஷ்ய புத்திரனின் கவிதையில் வருகின்ற ஊமைச் சிறுமியையும் சமீரையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் வன்முறையின் கொடூரக் கரங்கள் நம் பிள்ளைகளை எவ்வாறு நெரிக்கின்றன என்பதை வலியுடன் அறியமுடிகிறது. மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதையில் ஊமைச் சிறுமியின் வாழ்க்கை குறித்து எதுவும் பெரிதாக விவரிக்கப்படவில்லை.இருந்தும் நம்மை சூழ்ந்து கொள்கின்ற பதற்றத்திற்கான காரணம் அந்த ஊமைச் சிறுமியின் பாவனை மட்டுமன்று.அதற்குப் பின் இருக்கும் சூழலின் வன்மத்தினை நம் யூகத்தினால் கட்டமைக்கிறார் கவிஞர். இதனாலயே அந்தக் கவிதை அவ்வளவு நெருக்கமானதாகவும் கனமானதாகவும் இருக்கிறது. இதேபோல்தான் சமீரும்.வன்முறை என்பது ஒரு ராட்சஸ விருட்சம்.அதன் வேர்கள் மண்ணில் வாழ்கின்ற எந்தப் பாவமும் அறியாத பல்லாயிரக்கணக்கான சிறுபிள்ளைகளின் உதிரத்தினை உறிந்து கிளைவிடுகிறது என்பதையே சமீரும் மனுஷ்ய புத்திரனின் ஊமைச் சிறுமியும் நமக்கு நினைவுபடுத்துகிறார்கள்.   

இனம்,மதம் எனும் பாகுபாடு எத்தகைய வகையில் இச்சமூகத்தினை சீரழிக்கிறது, எத்தனை உயிர்களைக் காவு வாங்குகிறது, எவ்வளவு இரத்தங்களைச் சிந்தச் செய்கிறது என்பதனை ‘ஆயுதம்’ சிறுகதை வலிமையான உணர்வுகளால் நம் கண்முன்னே எழுதிச் செல்கிறது. ஆனால் மனோஜ் அவர்கள் எதனையுமே பிரச்சாரமாக செய்யவில்லை. வலிந்து திணிக்கப்பட்ட வாதங்கள் இக்கதையில் துளியும் கிடையாது. வெவ்வேறு சூழல்களும் அச்சூழல்களில் வாழும் பாத்திரங்களின் செயல்பாடுகளும் காட்சிகளாக நம்முன்னே விரிந்து நம்மையும் உடன் இழுத்துக் கொள்கின்றன.

‘ஆயுதம்’ சிறுகதையில் மொத்தமாக நான்கு கொலைகள் நிகழ்கின்றன.கமாண்டர் அந்த இளைஞனை சுட்டுக் கொல்கிறார்.சுருளி அம்பாஸிடரின் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்துகிறான்,அவனுடைய தந்தை கால் வெட்டி துடிக்கும் காட்சி அவனுக்குத் தெரிகிறது.மரண தண்டனைக்கான நான்கு வரிகளை உரக்கச் சொல்லிவிட்டு வாளின் கூர்மையைத் துரோகியின் கழுத்தில் பதிக்கிறான் சமீர்.நான்காவது கொலையைச் செய்வது அந்த பத்திரிகை ஆசிரியர்.
உடலை அறுத்து உயிரை பிரிப்பது மட்டும் கொலையன்று.குரூரங்களை ரசிப்பதும், துயரங்களையும் அழிவுகளையும் தன் சுயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதும் கூட கொலைச் செயலுக்கு ஒப்பானதுதான் என்பதனையே அந்தப் பத்திரிகை ஆசிரியரின் ஊடாக கதையாசிரியர் விளக்குகிறார்.

இந்த நான்கு சம்பவங்களும் parallelஆக நிகழ்கின்றன.கதையின் ஒரு பகுதிக்கும் மற்றொன்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நான்கு பகுதிகளும் தனித்தனியாக சொல்லப்படுகின்றன, தனித்தனியாகவே முடிவும் அடைகின்றன.இருந்தும் இந்த தனித்தனி முடிவுகளையே நான்கு பகுதியையும் கோர்க்கும் சரடாக அமைத்திருப்பதில் மிளிர்கிறது ஆசிரியரின் கதை சொல்லும் முறை.முடிவுகளையே குறியீடாக அமைத்திருப்பது ஆசிரியரின் தேர்ந்த ரசனையையும் சுட்டுகிறது.
‘ஆயுதம்’ சிறுகதை மறக்கமுடியாதவொரு நெகிழ்வான பயணம் போல் நம் மனதில் தேங்குகிறது.மனதின் பாழ்வெளியில் கட்டவிழும் வன்மத்தினை சாரமாகக் கொண்டு நம்முள் ஒருவித சமன் நிலைக்குலைவை ‘ஆயுதம்’ சிறுகதையின் மூலம் உண்டாக்குகிறார் மனோஜ்.நல்ல எழுத்துக்களை நேசிக்கும் ஒவ்வொருவரும் ‘ஆயுதம்’ சிறுகதையைப் படித்தல் அவசியம்.

பி.கு: ஆயுதம் சிறுகதை மனோஜ் அவர்களின் ‘சுகுணாவின் காலைப் பொழுது’ சிறுகதை தொகுப்பினில் இடம்பெற்றிருக்கிறது.ஆயுதம் தவிர்த்து அத்தொகுப்பினில் இடம்பெற்றிருக்கும் இன்ன பிற சிறுகதைகளும் வலிமையான களங்களையும் உணர்வுகளையும் உடையவை.

சுகுணாவின் காலைப் பொழுது 
உயிர்மை வெளியீடு. விலை: ரூ.70
                                                                                                                               துரோணா

நன்றி :உயிரோசை


Thursday, June 2, 2011

மழை பெய்து கொண்டிருந்தபோது....


பதினேழாம் நூற்றாண்டின் 
இறுதியில் பூத்த மலர்களின்
வாசத்தால் எனது அறை
நிரம்புகிறது.
என் தனிமையின் சுவற்றில்
உன் சித்திரத்தை 
எழுதிச் செல்கிறது
வானத்தின் கருநிழல்.
நான் காணும் 
அதே மழையைத் தான்
நீயும் காண்கிறாயா
என் அன்பின் ப்ரியங்கா..?

நன்றி:உயிரோசை

Monday, May 23, 2011

உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்


இறுதி யுத்தத்தின்
இறுதி போராளியை
விழுங்கிய வாளில்
இன்னமும் ரத்தக் கறை
காய்ந்திருக்கவில்லை.

வெந்தழல் மேகங்களில்
நீதித்தேவதைகளைக் கண்டதாக
வாக்குமூலம் அளித்தவர்கள்
கொலைகளனிற்கு அனுப்பப் படுகிறார்கள்.

பிசாசெழுதும் வரலாற்றினில்
நம்பிக்கையின் பெயரால்
சிந்தப்படும் கண்ணீர்த் துளிகளுக்கு
கோமாளிகளின் முகமூடி
அணிவிக்கப் படுகிறது.

ஓராயிரம் நூற்றாண்டுகளாக
மண்ணுக்கடியில்
புதையுண்டிருந்த புரட்சியின்
சொல்லை விடுவித்த
கவிஞன், தானெழுதிய
கவிதைகளை கிழித்தெறிகிறான்.

கோப்பைகளில் நிரம்பிய
அழுகுரல்களை பருகும்
அரக்கனுக்கு தெரியவேயில்லை
தான் சுவைப்பது
தீரா மௌனத்தினையே என்பது.

இங்கே,
இனியொரு போதும்
புழுக்கள் ஊர்ந்து செல்ல போவதில்லை
விதைகள் துளிர்விட போவதில்லை
துப்பாக்கிகள் இயங்க போவதில்லை.
அன்பின் சாட்சியாக
நல்லுறவின் சாட்சியாக
இறையாண்மையின் சாட்சியாக
இங்கே,அமைதி நிலைநாட்டப் பட்டுவிட்டது.

இவ்வுலகின் கடைசி தினத்தில்,
சிதைந்தவர்களின் உதிரமெழுதும்
தீர்ப்பின் பிரதிகள்
வாசிக்கப்படும் போது
கருணையின் தெய்வங்கள்
தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ளக் கூடும்.
                                                                                                                                                           - துரோணா

நன்றி :திண்ணை

Monday, May 2, 2011

இரண்டு கவிதைகள்



இன்று,
மெழுகுவர்த்தியின்
கடைசித்துளி தீயின்
மேல் விழுந்த
மழையின் முதற் தூரலில்
நான் உன்னுடைய
முகத்தைக் கண்டேன்.
அது என்னுடைய
முகம் இல்லை
என்று மட்டும் சொல்லிவிடாதே.
ஒருவேளை இதுவரை
நீயேக்கூட பார்த்திராத
உனது முகமாக இருக்கலாம்
*
இறுதியில்,கண்ணீர் சிந்தாமல்
அழக்கூட பழகிக் கொண்டு விட்டேன்.
இனியொரு பிரச்சினையுமில்லை.
புறக்கணிப்பின் கரங்களை
வாஞ்சையுடன் திரும்பவும்
முத்தமிடலாம்.

Saturday, March 5, 2011

கொஞ்சம் கிறுக்கல் -2

எதைஎதையோ ஆராய்கிறீர்கள்,
ஏதேதோ தீர்ப்பளிக்கிறீர்கள்.

காற்றெனவும் நிலவெனவும் கலங்குகிறது காலம்.
தீர்மாணங்களற்றும்,சுவடுகளற்றும


******

இனியும் உன்னிடம் மறைப்பதற்கில்லை
சொல்லிவிடுகிறேன்.
இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன்.
சொல்லாதுமிருந்திருக்கலாம்.
சொல்லாவிட்டால்தான் என்ன?
நீ அறிவாய் அல்லவா,நான் சொல்ல நினைப்பதை..?

******

உனக்காகவே நான் அதை உருவாக்குகிறேன்
உனக்காகவே நான் அதை உருக்குலைக்கிறேன்
என்னவென்று தெரியவில்லை..?
இன்னமும் கண்களை கசங்கச் செய்கிறது......

******

பிழைகள், திருத்தங்கள்
பின்னிரவின் கிறுக்கல்கள்
ஒழுங்கற்ற கனவுகள் என
இன்மையின் நிழலாக எனது டைரி,
எரித்து விடுகிறேன்
எரிக்க முடிகிறது, எனது டைரியை மட்டும்

******

காய்ந்த முற்செடிகளிலான வெயிற் நிலத்தில்
கருகி திரிகிறது பெயரற்ற ஒரு வெற்றுயிர்
மீண்டும் ஜனனிக்கும் தினத்தில்
தான் கொள்ள வேண்டிய பெயரை தேடிக்கொண்டு....

******


                                                                                 -துரோணா

Saturday, February 19, 2011

சருகுகள்


செம்மண் தரைகள்
தார் சாலைகள்
நீர் தேங்கிய சகதிகள்
புழுதியில் மறையும் பாதைகளென
நான் பயணிக்கும் திசைகளெங்கும்
சருகுகள்.
ஆம்,வெறும் சருகுகள்.

சாயம்போன அந்த உதிரிலைகள்
தொடரும் நீள்க் கோடையின்
சுடும் நினைவாக
என் வழிகளில் படர்கின்றன
சில சமயம் சலசலத்தும்
சில சமயம் சலனமற்றும்

"கிழித்தெறியப் படும்
காதல் கடிதங்கள் யாவும்
சருகுகளாகத் தான் மாறுகின்றன"
தனது நாட்குறிப்பில்
எழுதி வைக்கிறான்
கவிஞன் ஒருவன்.

எரிமலையினிலிருந்து வெடித்து
சிதறும் அக்னி ஜீவாலைகள்
சருகுகளாய் கீழே விழுகின்ற
ஓவியத்தை வரைகிறான்
ஓவியன் ஒருவன்.

கண்ணீர்க் கோர்த்த சருகுகள்
என் வாயிலை நிரப்புகின்றன
என் காலணியில் சேர்கின்றன
என் இரவின் வானத்தில்
வெறிபிடித்தாற் போல் நடனமாடுகின்றன.

இனியும் மாளாது.
சருகுகளை அகற்றியே ஆக வேண்டும்.
அதுவொன்றும் அவ்வளவு சிரமம் கிடையாது.

உடலின் ரகசியங்களை திறக்கின்ற
உலர்க் காமத்தின் பெருமூச்சைக் கொண்டும்
நம்பிகையின் பேரில் சிந்தப்படுகின்ற
உதிரத்திலெழும் பேரலைகளைக் கொண்டும்
வண்ணங்களிழந்த அந்த சருகுகளை
நான் அகற்றுகிறேன்.

கரைந்து மறைந்த
சருகுகளின் கருத்த நிழல்கள்
இப்பொழுது,என் வழிகளை
மறிக்கத் தொடங்கிவிட்டன.

"நிஜங்களைப் போல்
நிழல்கள் எளிதில்
மரித்துவிடுவதில்லை"
காற்றினில் எதிரொலிக்கிறது
மௌனத்தின் குரல்.

அழியா நிழல்களின்
நினைவுகளில்
சருகாகிக் கொண்டிருக்கிறேன்,நான்.
                                                                                      -துரோணா

Friday, February 4, 2011

நினைவுகளின் வார்த்தைகள்



ஒரு இலையுதிர்வை போல்தான்,
இருந்தது அக்கணம்.
மிகவும் இலகுவாக
அதே சமயம் மிகவும் கனமாக.

நீர்த்துப் போன மௌனங்களுடன்
கடந்துக் கொண்டிருந்தன 
தொடர்ந்து வெளிப்பட்ட 
ஒவ்வொரு கணங்களும்.
O
முன்தீர்மாணங்கள் இல்லாத 
எந்த நிகழ்விற்குமே
நான் இதுவரை பழகியதில்லை.
நேரங்காட்டியை மீண்டுமொருமுறை
சரி பார்த்துக் கொள்கிறேன்.

சொற்களை கையாள்வதுப் போல்
காலத்தினையும்,மிகுந்த நேர்த்தியுடனே
நீ கையாள்கிறாய்.
O                                                                      
                                                                                                 
உன்னுடைய கேள்விகள் அனைத்திற்குமே
என்னிடம் பதில்கள் உள்ளன,
பொருத்தமான வார்த்தைகள்தான் இல்லை.
நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஒரு சிகரெட் இருந்தால் தேவலாம்.
O
கூண்டு புலியின் கண்கள்
இரும்புக் கதவின் கம்பிகளை
எதிர்கொள்ளும்
அதே வேட்கையுடன்
அதே கோபத்துடன்
அதே ஏமாற்றத்துடன்
அதே வேதனையுடன்
நான் அந்த கணங்களை
எதிர்கொள்ள துணிகிறேன்

எந்த நியாயங்களுக்கும் தகுதியற்ற                                                            ஒரு குடிகார சூதாடி                                                         மீண்டுமொருமுறை                                                                   சீட்டுக்கட்டை கலைத்தடுக்குகிறான்
o
உன்னிடம் இருக்குமளவிற்கு
என்னிடம் சாட்சியங்கள் இல்லை.
நீ எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
நானும் எதையும் நிரூபிப்பதற்கில்லை.
நாளையும் மழை பெய்யும் என்ற
எளிய நம்பிக்கை மட்டுமே
என்னிடம் மீதமிருக்கின்றது.
O
இறுதியில்,
நீயும் சென்று விட்டாய்.
நானும் சென்றுவிட்டேன்.

சொல்லிக் கொள்ளாமல்
செல்வதில் தான் 
எவ்வளவு சௌகரியங்கள்.
யாரும் பார்க்கும் முன்னே
கண்களை துடைத்துக் கொள்ளலாம்.
O
நாம் சென்ற பிறகும்,
அந்த கணங்களுக்குள்ளாக,
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன 
நம் நினைவுகளின் வார்த்தைகள்.

வார்த்தைகள்
வெறும் வார்த்தைகளாக
மட்டும் இருப்பதில்லையே

Saturday, January 15, 2011

சாதாரணமானவன்


நான் சாதாரணமானவன்,
உங்களைப் போலவே.

இரும்பு கேட்டின் கம்பிகளை
இறுகப் பிடித்துக்கொண்டு,
என்றேனும் ஒருநாள்
இந்த பாதைகளனைத்தும்
மறைந்துவிடக்கூடுமென 
நம்பிக் கொண்டிருப்பவன்

உபயோகத்தில் இல்லாத
பழைய எண்கள் அனைத்தும்,
திரும்பவும் தொடர்புக்கொள்ளும் நிலைக்கு
திரும்பிவிட வேண்டுமென
ப்ரார்த்தித்துக் கொண்டிருப்பவன்.

என் அறையில் எந்த வாசமும் இல்லை.
என் டைரியில் எந்த கிறுக்கலும் இல்லை.
எந்த பாடலும், எனக்கு
எதையும் நினைவூட்டுவதில்லை.

நான் சாதாரணமானவன்
உங்களைப் போலவே.

கண்முன் விழுகின்ற சடலங்களில்
என் கைரேகைகள் இல்லை என்ற வகையில்
நான் நிபந்தனைகளற்ற நிரபராதி.

எல்லாம் சரியாகவே இருக்கிறது.
கடவுள்களின் மீது எனக்கு,
எந்த குற்றச்சாட்டும் இல்லை.
விதிமுறைகளை ஏற்பதில் எனக்கு,
எந்த ஆட்சபேனையும் இல்லை.

கொடுப்பதற்கும் எடுப்பதற்கும்
ஏதுமில்லாத தேசத்தில் நான் வாழ்வதற்கில்லை.
தாழிடும் ஓசை கேட்கும்பொழுதெல்லாம்
நான் கதவு தட்டுவதை நிறுத்திவிடுகிறேன்.
கையெழுத்திட நேரும்பொழுதெல்லாம
நான் அன்றைய தேதியை மறந்துவிடுகிறேன்.
அழுகை வரும்பொழுதெல்லாம்
நான் ஒரு கவிதையெழுத துவங்கிவிடுகிறேன்.

ஆம்.
நான் சாதாரணமானவன்,
மிகவும் சாதாரணமானவன்.
உங்களைப் போலவே.
                                                                                                                -துரோணா

Friday, January 7, 2011

சிதிலங்கள்

உரையாடல்களின் சொற்களுக்குள்ளாக,
நான் ஒளித்து வைக்கின்றேன்.
உன் மீதான குற்றச்சாட்டுகளை,
மீண்டும் நீ கண்டெடுக்கின்றாய்,
மன்னிப்பிற்கான மற்றுமொரு சாத்தியத்தை.


சதுரங்கத்தின் கட்டங்களுக்குள்ளாக,
நான் மாற்றியமைக்கின்றேன்.
அதன் கருப்பு வெள்ளை விதிமுறைகளை,
மீண்டும் நீ கடந்துவிடுகின்றாய்,
எளிதாக மிகவும் எளிதாக.

இன்னமும் இருக்கின்றது,
கொஞ்சம் ஏமாற்றம்.
நீ சொல்லும் உலர்ந்த பொய்களை,
நம்புகின்ற அந்தக் கணத்திற்குள்ளாக.

இன்னமும் இருக்கின்றது,
கொஞ்சம் துக்கம்.
நீ சொல்லும் நட்பின் உண்மைகளை,
சந்தேகிக்கின்ற காதலின் கண்களுக்குள்ளாக.

பிரிவின் இறுதி முத்தத்தில்,
சிதறிய உமிழ் நீரினை,நான்
எங்கும் தேடிக்கொண்டிருக்கின்றேன்,
தீராக் கண்ணீரின் பெருங்கடலில்.

நான் கட்டமைக்கின்றேன்,
என் நம்பிக்கைகளின் தீர்மாணங்களை.
எதிர்பார்ப்புகளின் நிச்சயமின்மைகளென
தொடர்கின்றன,நாட்களின் நினைவுகள்.

பிறழ்வுகளெனவும் கனவுகளெனவும்,
என்னை சூழ்ந்து பரவுகின்றன,
நம் காதலின் சிதைந்த இரவுகள்.

உன் கரம் பற்றுதலின் வெப்பம்,
அங்கு எரித்துக் கொண்டிருக்கிறது,
காற்றின் பெரு வெளியை.

முடிவுபெறாத ஒரு நூற்றாண்டு கவிதையென,
ஏங்குகின்றன ,உருக்குலைந்த என் இறுதி உணர்வுகள்,
தீனமாய் அழும் ஒரு முரட்டு கிழவனைப் போல்
                                                                                                                      -துரோணா