Saturday, October 2, 2010

கனவுகளின் நிழல்

வேலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட
மாலை வேளை
தண்ணீர் குடித்துவிட்டு படுக்கைக்குச் செல்கிறேன்
கண்களை மூடியபோது
இமைகளின் மீது படர்ந்திருந்த வண்ணக்குமிழ்கள்
எண்ணங்களின் நகல்களை
மூளையின் உள்ளே பயணிக்கச் செய்கின்றன

முகங்கள் மாற காலங்கள் சுழல என
தேடியதையெல்லாம்
தொலைத்துவிட்டதன் வெறுமை
கருப்பு நதியாக
என் மதுக் கோப்பையில் தளும்புகிறது

வன்மமும் குரூரமும்
விகார வனவிலங்குகளென
உருப்பெற்று விழி நரம்புகளில்
ஊடுருவி இதயக்குழாய்களை
அறுத்தெறிகின்றன

கேலி பேசிய குரல்களின் அபசுவரத்தில் இருந்தும்
கிழித்தகற்றப்பட்ட உறவுகளின் எச்சத்தில் இருந்தும் விடுபட
நினைவுகளின் பாதையோடு வெகுநேரம் போராடவேண்டியிருக்கிறது

கருணை அன்பு நட்பு நேசம் என
வேடம் தரித்த முகங்கள்
ரட்சகன் தோட்டத்து சாத்தானென
என் நிர்வாணத்தை ஆபாசமாக்குகின்றன

மரணத்திற்கும் அதன் முந்தைய நொடிக்குமிடையேயான 
பயமும் பரிதவிப்பும் பார்வையை மெல்ல மழுங்க செய்ய
இரையை தேடி என் செவிகளில் நுழைந்த சர்ப்பம்
வேட்டைக்கான வேகத்தில் தனது நீளத்தினை
சரசரவென அதிகரித்து என் நாசியின் வழியே
தனது இரு தலைகளையும் வெளிக்கொணர்கிறது

கண்கள் படபடவென அடித்துக்கொள்கின்றன
உடல் முழுவதுமாக வியர்வையில் நனைந்திருந்தது
மின்விசிறியின் வேகத்தினை கூட்டுகிறேன் 
மின் காம்புகள் சுழல மறுக்கின்றன.

கண்ணாடிச் சுவர்களின்
அத்தனை பிம்பங்களிலும் "நான்"
நான் தற்கொலையில் தோற்று கொலைகள் செய்பவனாக
நான் இரக்கமுள்ளவனாக
நான்  எழுத்தாளனாக
நான் வேசியின் மடியில் நாயகனாக
நான் மதுபான விடுதியில் பைத்தியக்காரனாக
நான் பிணங்களை தேடும் காட்டு கழுகாக
நான் சுடுகாட்டினில் சில்லறை பொறுக்குபவனாக

ஒவ்வொரு பிம்பங்களும்
ஒன்று
மற்றொன்று
இன்னொன்று என
அம்பாரங்களை உண்டுப் பண்ண
பிரதியானவை யாவும்
கதறலாய் அழுகின்றன

சிந்தனை செயலிழக்க துவங்குகிறது
மீண்டும் தண்ணீர் குடிக்கச் செல்கிறேன்
நீரினில் உதிரத்தின் சுவடுகள்
உறியப்பட்டவை
உறியப்பட இருப்பவை

தொண்டை குழியினை பிளந்துக்கொண்டு
குருதி வெள்ளம் தரையை நனைக்கிறது
அறையெங்கும் பொசுங்கிய சாம்பலின் வாசம்

நாறும் ஞாபகங்களிலிருந்து விடுவித்து
சுயநினைவுக்கு மீட்டுவந்த அலைபேசியில்
இனியக்குரல் யுவதியொருத்தி
கொஞ்சலாய் பேசுகிறாள்
"உங்களுடைய இரண்டு நிமிடங்களை
கடனாக அளித்தால்
நீங்கள் வீடுகட்ட
நாங்கள் கடன் தருகிறோம்"
இப்பொழுதிற்கு
ஒரு கருநீல புடவையும்
இரண்டடி ஸ்டூலும்கூட  போதும் சகோதரியே
நரகத்தின் வாசல் திறந்தே இருக்கிறது....
                                                                                                                 துரோணா.